செயல் முறையில் கற்பிக்கும் பல்கலைகழகங்கள் தாத்தா பாட்டி


தாத்தா ஒருவரால் தான் குடும்பத்தில் எல்லோரையும் மன்னிக்க, 
கண்டிக்க... ஏன்... 
தண்டிக்கவும் முடியும். வானளாவிய குடும்ப அதிகாரம் படைத்திருந்த தாத்தா இப்போது எங்கே?. 

வீட்டிற்கு யாராவது புதிய ஆள் வந்தாலோ, ஆண் குரல் கேட்டாலோ...! யாரு...? என சத்தமாக கர்ஜிக்கும் குரலில் எதிராளி சற்று ஆடித் தான் போவார்.

தாத்தா வீட்டில் இருந்ததால் பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் மது அருந்துவதையும், புகை பிடித்தலையும் தவிர்த்தார்கள்.

லேட்டாக வீட்டிற்கு வந்தால், கதவை தட்டியவுடன் முதல் ஆளாய் 
கதவை திறந்து
 'ஏன்டா லேட்' 
என மகனையும், பேரனையும் அதிகாரத்துடன் கேட்கும் உரிமை தாத்தாவிற்கு மட்டும் தான் இருந்தது. 

அந்த உரிமையை பறித்ததால் இன்று வீட்டிற்கு ஒன்றிரண்டு 'குடிமகன்கள்'முளைத்து விட்டனர்.

பாடம் சொல்லி கொடுப்பதாகட்டும், வாத்தியாரிடம் சென்று 'படிக்கலைனா நல்லா அடிங்க' என்று சொல்லிவிட்டு, பேரன் போன பின்பு 'அடிச்சு கிடிச்சுப்புடாதீங்க; 
ஒரு பேச்சுக்கு சொன்னேன்,'' என்று மறுநிமிடமே வாத்தியாரிடம் மல்லுகட்டும் அந்த தாத்தாவின் அன்புக்கு ஈடு இணையே இல்லை. 

டேய் என்ற தாத்தாவின் கம்பீரக்குரலுக்கு 
அப்பா, பெரியப்பா, சித்தப்பா, மாமா, அண்ணன், தம்பி 
என அத்தனை பேரும் சர்வ நாடியெல்லாம் அடங்கி பதுங்கி இருந்த காலம் மறக்க முடியாதவை.

தாத்தாவின் குரலுக்கு ஆதரவாய் புதிதாய் வந்த மருமகள்களும் இணைந்து போய், கூட்டுக் குடும்ப உறவுகளும், 
வரவுகளும் சங்கமிக்கும். 

அன்பின் உருவிலேயே கண்டிப்பையும், கோப முகத்துடன் இழுத்து வைத்துச் சாப்பாடு ஊட்டவும், சிரிக்கச் சிரிக்கக் கதை சொல்லவும், 
அழுது அழுது கஷ்டங்களைப் புரிய  வைக்கவும் 
பாட்டியை விட 
சிறந்தவர் யார்...

பாட்டியின் அன்பு என்றுமே ஒரே பார்வை... ஐந்து வயது பேரனும் இருபது வயது பேரனும் ஒன்றாகவே தெரிவர். இரண்டு பேருக்கும் அதே அன்புதான் .

பல சமயங்களில் தாத்தாவை எதிர்த்து சண்டை போட்டு குழந்தைகளின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் பாட்டி கில்லாடி.

பெற்றோரிடம் அடிவாங்கி அழுத பொழுதுகளில்
அணைத்து மடி சாய்த்து
தேற்றி, தவறுகளை 
புரியவைத்து மீட்பதும் பாட்டி தானே...

எந்த ஒரு செயலையும் பக்குவமாய் அணுகி தீர்வு சொல்வது அவர்களின் கைவண்ணம். 
வயதும், அனுபவமும் 
சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் ஏராளம்.

குடும்ப உறவுகள் அறுந்து போகாமல், நேசங்களும், பாசங்களும் விரிசல் விடாமல் ஆண்டுதோறும் புதுப்பித்து கொண்டிருந்த ஒரே உறவு தாத்தா பாட்டி தான். 

மற்ற குழந்தைகளை விட தாத்தா பாட்டிகளோடு வளரும் குழந்தைகளின் நடத்தைகளும், செயல்பாடுகளும் மேம்பட்டதாக இருக்கும் என்பது அறிவியல் ரீதியாக சொல்லப்படுகிறது.

தாத்தா பாட்டிகளுடன் அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகள் நிறைய வாழ்வியல் விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். 

சிக்கலான சூழ்நிலையை கையாளும் திறமையும் அவர்களிடம் இருக்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளையும் அறிந்து கொள்கிறார்கள்.

தாத்தா, பாட்டி... இப்போதைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் ஓர் பொக்கிஷமான உறவு.

அந்த உறவு தாமரை இலை மேல் தண்ணீர் போல ஒட்டாமல் போனதால் தான் இன்றைய பல குடும்பங்கள் சுக்கு நுாறாய் உடைந்து, 
சிதறிப் போயிருக்கின்றன.

குடும்ப உறுப்பினர்களின் மூக்கணாங் கயிற்றை அதிகாரமாக கையில் வைத்திருந்த பல முதியவர்கள் இன்று முதியோர் இல்லங்களில் கட்டிப் போடப்பட்டிருக்கின்றனர். 

பாசம், பரிவு, அக்கறை, கலாச்சாரம், ஆரோக்கியம், வாழ்வியல் முறை என வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் செயல் முறையில் கற்பிக்கும் பல்கலைகழகங்கள் தான் தாத்தா, பாட்டி

Ultimate Guides on Earn Money Online:
1001 Ways to Make Money Online at Home Free Fast Updated

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *