நாட்டுப்புறக் கதை: குள்ளனும் நெட்டையனும்


நாட்டுப்புறக் கதை
குள்ளனும் நெட்டையனும்

முன்னொரு காலத்தில் குள்ளன் ஒருவன் இருந்தான். அவன் பக்கத்து வீட்டில் மிக உயரமான மனிதன் ஒருவன் இருந்தான். இருவரும் புத்தி கூர்மையுடையவர்கள். நெட்டையனைக் காணும் போதெல்லாம் குள்ளன் மனத்தில் தாழ்வு மனப்பான்மை மிகுந்தது.
மனிதர்களின் சிறப்பு உயரத்தைப் பொருத்ததன்று. குள்ளர்களே மற்றவர்களைவிடச் சிறந்தவர்கள்; உயர்ந்தவர்கள் என்று தன் மனத்தைத் தேற்றிக் கொள்வான் குள்ளன். ஒருநாள் இந்தக் கருத்தை அவன் நெட்டையனிடம் சொன்னான்; அவன் பதில் சொல்லவில்லை.
ஒருநாள் இருவரும் ஒரு சிற்றூருக்குச் சென்றனர். வழியில் ஓர் ஆறு குறுக்கிட்டது. அதைக் கடக்க ஒரு பாலம் இருந்தது; அஃது அவர்கள் இருந்த இடத்திலிருந்து மிகத் தொலைவில் இருந்தது. ஆற்று நீர் சுத்தமாகவும் தெளிவாகவும் இருந்தது. ஆழம் நான்கு அல்லது ஐந்து அடி மட்டுமே இருந்தது.
"நண்பனே நீ என் தோளில் ஏறிக்கொள். ஆற்றைக் கடந்து செல்லலாம்," என்று குள்ளனைப் பார்த்து நெட்டையன் சொன்னான்.
"என்னைக் குழந்தை என்று நினைத்தாயா? உன்னைப் போல் எனக்கும் கால்கள் உண்டு. என்னாலும்

நடக்க முடியும், என்று சினத்தோடு சொன்னான் குள்ளன்.
“அப்படியானால் பாலத்தின் வழியாகச் சென்றுவா, நான் அந்தக் கரையில் காத்திருக்கிறேன்; என்றான் நெட்டையன். "வேண்டாம் நானும் உன்னுடன் வருகிறேன்," என்று குள்ளன் துணிவோடு ஆற்றில் இறங்கினான்.
இறங்கியவுடன் நீர் அவன் மேவாய் வரை வந்தது. அடுத்த அடி வைத்தபோது கால் இடறியது. குள்ளன் முற்றிலும் மூழ்கி நீரில் தவித்தான். நீரோட்டம் அவனை இழுத்துப் போனது. அதைக் கண்ட நெட்டையன் விரைந்து நீரில் இறங்கினான்; தன் நீண்ட கையால் குள்ளனின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அவனைக் கரை சேர்த்தான்.

"குள்ளர்களும் நெட்டையர்களும் சமமானவர்களே; ஆனால், அவர்களால் ஒரே மாதிரியான செயல்களைச் செய்ய
முடியாது என்பதுதான் உண்மை. இந்தக் கருத்தை என் இறுதி மூச்சு உள்ளவரை மாற்றிக் கொள்ள மாட்டேன்; என்று சொன்னான் குள்ளன்.
குள்ளன் நெட்டையன் மேல் ஏறிக் கொண்டான். இருவரும் வீடு திரும்பினர்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *